மரண வலியிலும் மலர்ந்த புன்னகை!

நமது அண்டை நாடான சீனாவில், மரண தண்டனைகளுக்குப் பஞ்சம் இல்லை.

மரண தண்டனை என்றால், இங்கிருப்பது போல் தூக்கிலிடும் வழக்கம் எல்லாம் அங்கு இல்லை.

விஷ ஊசி போடுவது அல்லது தலையின் பின் பக்கத்தில் துப்பாக்கியால் சுடுவது ஆகிய இரண்டு முறைகளில்தான் மரண தண்டனை அங்கு நிறைவேற்றப் படுகிறது.

மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச நாடுகளும், காட்டுக் கத்தலாக கத்தியும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், மரண தண்டனையைச் சர்வ சாதாரணமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது சீனா.

கடந்த 2005-ல் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
.
சீனாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை குறித்தான நடவடிக்கைகள், வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாமல் ரகசியமாகத்தான் நடக்கும். இதையும் மீறி, ஒரு சில தண்டனைகள் பற்றிய விஷயங்கள், வெளி உலகத்துக்குக் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன

அப்படி வெளியில் வந்த ஒரு விஷயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம்…….
.

போதை மருந்துக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு, 2003ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது, அந்த நான்கு பெண்களின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

அந்தப் புகைப்படங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு டி.வி சேனலில் வெளியாகி, சர்வதேச அளவில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மா ஷிங்குய், லி ஜூகுவா, டாய் டொங்குய், ஹி ஜியுலிங் என்ற நான்கு பெண்களுக்கும், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நான்குபேரும் வுகான் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் இரவே, இவர்களின் கடைசி நிமிடங்களைப் பதிவு செய்வதற்காகக் கேமராமேன்கள் வந்துவிட்டனர்.

முதல் நாள் இரவு 9:00 மணிக்குத் துவங்கி, தண்டனை நிறைவேற்றப்படும் அடுத்த நாள் காலை 7:21 மணி வரை, அவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு நிகழ்விலுமே, அந்த நான்கு பெண்களும் சாவைக் கண்டும் சற்றும் கலங்காமல் புன்னகையுடனேயே காணப்பட்டனர்.

முதல் நாள் இரவில், நான்கு பேருமே தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டிருந்தது.

அந்த இரவுப் பொழுதில், தண்டனை நிறைவேற்றப்படும் போது அணிய வேண்டிய உடையைத் தானே தேர்வு செய்து அணிந்து கொண்டார் டொங்குய். இதன்பின் இரவு உணவு சாப்பிட்டார். இது, அவரின் கடைசி உணவு என்பதால், அங்கு இருந்த பெண் அதிகாரியே அவருக்கு உணவை ஊட்டி விட்டார். சிரித்த முகத்துடன் அதை மகிழ்ச்சியாக சாப்பிட்டார் டொங்குய்.

இரவு 10:15 மணிக்கு மற்றொரு அறையில், லி ஜூகுவாவின் கடைசி ஆசை எழுத்துக்களாகப் பதிவு செய்யப்பட்டன. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் புன்னகையுடன் அமர்ந்தபடி, தன் கடைசி ஆசைகளை அவர் கூற, அங்கிருந்த சிறை அதிகாரி அதைக் கனத்த இதயத்துடன் பதிவுசெய்து கொண்டார்.

தண்டனை பெற்றவர்களில் மிக இளையவரான, 25 வயது ஜியுலிங்கின் அறையிலும் இதே காட்சி காணப்பட்டது. சிறிய ஸ்டூலில் சிரித்தபடி அமர்ந்திருந்த ஜியுலிங்கிற்கு, பெண் அதிகாரி கடைசி உணவை ஊட்டி விட்டார்.

அதிகாலை 4:00 மணிக்கு, நான்கு பேரும் ஒரே அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் காவல் அதிகாரிகளும், சக கைதிகளும் அமர்ந்திருக்க…..

தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்குச் செல்வதற்கான ஷூவை, அந்த நால்வருக்கும் அதிகாரிகள் வழங்கினர். அப்போதும் கூட மிகவும் கலகலப்பாகக் காணப்பட்ட ஜியுலிங், காவல் அதிகாரிகளுடனும், சக கைதிகளுடன், ஜோக் அடித்தபடி இருந்தார்.

பொழுது புலர்ந்தது. அந்த நான்கு பெண்களுக்கு மட்டும், “அடுத்த நாள் பொழுது புலர்வதைக் காண்பதற்கு நாம் உயிருடன் இருக்கப் போவது இல்லை’ என்ற உண்மை உள்ளுக்குள் உறைத்திருக்கும்.

ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், சுறுசுறுப்பாகக் குளித்து முடித்து, புன்னகையை உதட்டில் தவழவிட்ட படியே, தங்களது கடைசிப் பயணத்துக்குத் தயாராயினர் அந்த நான்கு பெண்களும்.

காலை 7:00 மணிக்கு நான்கு பேரும் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன், அன்று தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மேலும், 20 கைதிகள் காத்திருந்தனர். அனைவரும் வரிசையாக நடத்தி அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்ற மூன்று பேரும் சிரித்த முகத்துடன் அமைதியாகச் சென்று கொண்டிருக்க, வயதில் இளையவரான ஜியுலிங் முகத்தில் மட்டும் புன்னகை மறைந்து, கலவர ரேகைகள் படரத் தொடங்கின. நடந்து செல்லும் போதே அவரது மனதில் மரண பீதி ஏற்பட்டது.

வயிற்றுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட, கண்களை முட்டிக் கொண்டுக் கண்ணீர் எட்டிப் பார்க்க, அழுகையை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும், வாய் வழியாகவும், கண்கள் வழியாகவும், அழுகையாகவும், கண்ணீராகவும் வெடித்துச் சிதறின.

மரணத்தைத் தழுவக்கூடிய மனதைரியத்தை இழந்தவராக, அவர் வாய்விட்டுக் கதறி அழுத காட்சி கொடூரமானது.

குற்றவாளிகள் அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குப் பின்பக்கமாகத் தண்டனையை நிறைவேற்றுவதற்காகத் துப்பாக்கிகளுடன் போலீசார் தயாராக இருந்தனர்.

காலை 7:21 மணிக்குத் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் வரிசையாக வெடிக்கத் துவங்கின…..

துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு சப்தத்தின் முடிவிலும், ஒரு குற்றவாளி அலறித் துடித்தபடி மண்ணில் சாய்ந்தார்…..

இப்போது ஜியுலிங்கின் முறை வந்தது. கண்களை இறுக மூடிக் கடைசி நொடிக்காகக் காத்திருந்தார். அவரது முகத்தில் அப்போது ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

சீனப் போலீசாரின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட புல்லட் எனும் உலோகப் பிசாசு….. ஜியுலிங்கின் தலையின் பின்புறத்தில் பாய்ந்து, முன்புறம் வழியாக வெளியில் வந்து விழுந்தது. சில நொடிகளுக்கு முன்பு உயிருடன் இருந்த ஜியுலிங்கின் உடல், உயிரற்ற உடலாக மண்ணில் சாய்ந்து மரித்துப்போனது.

மனித நேயத்தையும், மனித உரிமை ஆர்வலர்களின் கூக்குரலையும் மவுனமாக்கிவிட்டு……. அந்த இடமே மயான அமைதியில் மூழ்கிப் போனது.

நன்றி:- சி. சண்முகநாதன்.

பாலியல் கொடூரம்……. 18 பெண்கள்……. 19 ஆண்டுகள்….. பரபரப்பான தீர்ப்பு !

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே பெரு‌ம் பரபரப்பை ஏற்படுத்திய வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

19 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு….. மெதுவாக, மிக மெதுவாக…..குற்றம் சாட்டப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 53 பேர் இறந்து போய்விட்ட நிலையில்….. போனால் போகிறது என்று சாவகாசமாகத் ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க‌ப்பட்டு உ‌ள்ளது.

“தாமதமாக வழங்கப்படுகிற நீதி, மறுக்கப்படுகிற நீதிக்குச் சமம்” என்பது தராளமான பணக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால்….. வறுமையின் கொடுமையில் வாடிக்கிடக்கும் வாச்சாந்தி மக்களின் வழக்கில் 19 ஆண்டுகள் என்பது பெரிய ஒரு பிரச்சினையல்ல.

190 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தீர்ப்பு என்று சொன்னாலும் கூடக் காத்துக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஏற்கனவே பட்ட வேதனைக்கே இன்னும் மருந்தில்லை என்கிறபோது, இனி எது நடந்தாலும் கம்முனு கிடக்க வேண்டியதுதான்.

வாச்சாத்தி வழக்கு — ஒரு சின்ன ப்ளாஷ் பேக்…..

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் வ்றுமையின் கொடுமையில் சுமார் 300 வீடுகள்.

மனித உரிமையையே மல்லாக்கப் புரட்டிப்போட்ட அதிகார வர்க்கத்தின் மிகப் பெரிய அத்துமீறல் அங்கு அரன்கேறிய நாள்…. 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி.

இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் சந்தன மரங்கள் ஏராளமாக இருந்தன. இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர்.

இந்தக் கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல்கள் அரசல் புரசலாக அம்பலத்துக்கு வந்துவிட…… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். “சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…” என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரைக் கைது செய்து சிறைக்கும் அனுப்பினர்.

இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர… தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

இந்தப் புகார் தொடர்பாக முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் அண்ணாமலை 1992ஆம் ஆண்டு ஜூன் 22ஆ‌ம் தேதி அரூர் காவ‌ல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அந்தப் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற‌ம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக்குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன? என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் த‌‌மிழக அரசுக்கு உத்தரவிட்டது

இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர், வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவின் அறிக்கை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்யப்பட்டதை‌த் தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. ‌நீ‌திம‌ன்ற‌த்தின் உ‌த்தர‌வி‌ன்பே‌ரி‌ல்தான் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தின‌ர்.

இப்படிப் பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வந்தது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை…. முக்கித் தக்கி முடிவுக்கு வந்திருக்கிறது.

வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

இதனிடையே, குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், “சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, ‘சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று ‘ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையைத் துரிதமாக்கும்படியும் தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்படி வாச்சாத்தி வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் கடந்த ஜூலை 5ஆ‌ம் தேதி முதல் தொடங்கி நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம்சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராகித் தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வாதாடினார்கள். அதன்பின் இருதரப்பினரின் பதில் வாதமும் நடந்து முடிந்து, வழக்கு முடிவை எட்டியிருக்கிறது.

வாச்சாத்தி வழக்கில் குற்றம்சா‌ற்றப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பட்டியலில் 1ம் எண் முதல் 155 எண் வரை உள்ளவர்கள் வனத்துறையைச் சேர்ந்தவர்கள். 156வது எண் முதல் 263 எண் வரை உள்ளவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். 264வது எண் முதல் 269வது எண் வரை உள்ளவர்கள் வருவாய்துறையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் உள்ள 269 பேரில் 53 பேர் வழக்கு நடக்கும்போதே இறந்து விட்டனர். மீதமுள்ள 216 பேர் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி வந்தார்கள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட்ட‌த்த‌க்கது.                                                                                                                                                                                                              

வீரப்பனுக்கு பிறகு வாச்சாத்தி!

கடந்த 2004ல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய தர்மபுரி மாவட்டமான பாப்பாரப்பட்டிக்கு படை எடுத்தன. அந்த சம்பவத்துக்கு பிறகு தீர்ப்பை கேட்கவும், ஒளிபரப்பு செய்யவும் பிரபல ஆங்கில சேனல்கள் உள்பட தமிழ் சேனல்களும் ஒளிபரப்பு வாகனங்களுடன் தர்மபுரி கோர்ட் வளாகம் முன்பு காத்திருந்தன. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

3 பஸ்சில் வந்த கிராம மக்கள்!

ஒட்டுமொத்த கிராமத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய வழக்கில், தீர்ப்பை கேட்பதற்காக வாச்சாத்தி மலை கிராம மக்கள் 3 பஸ்களில் கோர்ட்டுக்கு புறப்பட்டனர். இதில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களும், தாக்குதலுக்கு ஆளான ஆண்களும் அடங்குவர். பஸ்சில் ஏறுவதற்கு முன்னதாக பெண்கள், மலை கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் கண்ணீர் மல்க சாமி கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர்.

தீர்ப்பு என்ன ஆச்சு?

19 வருடங்களாக வலியோடு, வேதனையோடு, வாழ்க்கையையே தொலைத்துவிட்டுத் தவித்துக் கொண்டிருக்கிற 18 பெண்களும், இந்தத் தீர்ப்பைப் பார்த்து சந்தோஷப் படுவார்களா என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.

அதிகாரி வீட்டுக் கோழிமுட்டைகூட குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும் சக்தி படைத்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. 

இருபது ஆண்டுகளுக்கு பிறகு குற்றம் என்கிறது கோர்ட். இனி மேல்முறையீடு, வாய்தா என்று இழுத்துத் தண்டனை வழங்க இன்னும் இருபது ஆண்டுகளாவது ஆகும்….

பொறுங்க சார், அவசரப்படுறீங்க…. 19 வருஷம் தானே ஆகியிருக்குது. நாம் இந்தியாவில்தானே இருக்கிறோம். துபாயில் அல்லவே!

ஒயின் மட்டும்தானா? மெயின் அயிட்டமும் பரிமாறப்பட்டதா?…

இலங்கையில் இறுதிப்போர் நடந்தபோதும் சரி…..

அந்தக் கொடூரமான போரை நிறுத்தக்கோரி ஐ.நா.பாதுகாப்புச் சபையில் தீர்மாணம் நிறைவேற்ற முற்பட்டவேளையிலும் சரி….

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் எனது மீனவ சகோதரன், கழுத்தறுபட்டுப் பிணமாகத் திரும்பிய நிலைகண்டு கதறி அழுதபோதும் சரி…..

ஊரறிய உலகறிய ஒரு இனத்தின் ஒட்டுமொத்த வேர்களுமே அழிக்கப்படுகிறதே, கேட்பதற்கு நாதியில்லையா? என்று கேட்டுக் கேட்டுக் கெஞ்சிய போதும் சரி….

இந்தியத் திருநாட்டின் மகாராஜாக்களும் மகாராணிகளும் இலங்கைக்குத்தான் சேலை துவைக்க ஓடினார்களே தவிர, எங்கள் பக்கம் திரும்பி ஏன் என்று கூடக் கேட்கவில்லையே…… ஏன்?

ராஜபக்க்ஷே கண்ஜாடை காட்டுகிற எல்லா நேரங்களிலுமே, எங்களை ஆள்வதாகச் சொல்லப்படுகிற பிதாமகன்களின் பேனாக்கள், தானாகவே இலங்கைக்காகத் தலை குனிந்து விடுகின்றனவே….. எப்படி?

உன்னோடு பிண்ணிப் பிணைந்து கிடக்கிற ஒரு இனத்தையே ஒதுக்கி வைத்துவிட்டு, எந்தக் காலத்திலும் உனது நாட்டுக்கு எதிரியாக மட்டுமே இருக்கப் போகிற ஜென்மத்துடன் எப்படி இப்படியெல்லாம் உங்களால் கொஞ்சமுடிகிறது?

“ராஜீவ் படுகொலை — மறக்க முடியுமா? மன்னிக்கத்தான் முடியுமா?’ என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்….. ஒரு துளி கூட வெட்க உணர்வு இல்லாமல்.

மறக்க முடியுமா என்றால் முடியாதுதான். எப்படி மறக்க முடியும்?

அந்த ஒரு பிணம் சிதறிக்கிடக்கிற படத்தை நீ காட்டுகிற பொழுதெல்லாம்….. பல ஆயிரம் பேரைக் கொன்றொழிக்கவும்– பல நூறு பெண்களின் கற்பைச் சூறையாடவும் துணைபோன ஒரு துரோகியின் பிணமாகவே அது தெரிகிறது…… எப்படி அதை மறக்க முடியும்? எப்படி அவரை மன்னிக்க முடியும்?

மறக்க முடியுமா என்று கேட்பவர்களே….. எதை மறக்கக் கூடாதென்று நீங்கள் சொல்கிறீர்களோ, அதையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு…… மறக்கக் கூடாதவரின் மனைவியே எந்தக் கவலையுமில்லாமல் காசு ஒன்று மட்டுமே குறி என்று ஜாலியாகக் கூத்தடித்துக்கொண்டு இருக்கிறார்…… நீங்கள் மட்டும் ஏன் ஒரு இனத்தையே அழிக்கத் துணை போனவனுக்கு இன்னும் வக்காலத்து வாங்கிகொண்டிருக்கிறீர்கள்?

இந்தப் படத்தைப் பாருங்கள்…..

இலங்கையிலிருந்து கொடூரன் மகிந்தர் ராஜபக்க்ஷே தனது மனைவி மற்றும் டக்ளஸ் என்று பல பன்றிக்குட்டிகளோடு இந்தியா வந்திருந்தபோது, நம் ஊர் அரசியல்வாதிகளால் அவர்களுக்காக நடத்தப்பட்ட “தண்னிப் பார்ட்டியில்” எடுக்கப்பட்ட படம் இது.

மிகவும் உயர்மட்ட அளவில் நடைபெற்ற இந்த இரவுநேரக் களியாட்டக் கூட்டத்தில், “ஒயின்” என்னும் மதுபானம் போதும் போதும் என்கிற அளவுக்கு மிகவும் தாராளமாகப் பரிமாறப்பட்ட்டு இருக்கிறது. இதில், கருணை மனுவைத் தள்ளுபடி செய்த நமது முதல் குடிமகளும் கூடக் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது படத்தைப் பாருங்கள்….. ஒரு ஓரமாக டக்ளசுக்கு நம்ம ஊர் சிவகங்கைச் சீமான்.சிதம்பரம் அவர்கள் ஒயின் ஊத்திக் கொடுக்கிறார். பின்னர் இருவரும் சியர்ஸ் சொல்லிவிட்டுத் தண்ணியடிக்க ஆரம்பிக்கின்றனர்.

தெரியாது என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றுக்குமே வாயைத் திறக்காத மௌன சாமியார் மன்மோகன் சிங்கைப் பாருங்கள்…. எவ்வளவு சந்தோஷமாக ஒயினுக்காக வாயைத் திறக்கிறார் என்று.

இதில் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா வேறு தண்ணியடிக்கிறார். கேட்டால் விருந்து, உபசாரம், நாகரீகம் என்று வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்து விடுவார்கள்.

இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதற்குப் பின்னர், டக்ளஸ் போதை மீறிப்போன நிலையில் டான்ஸ் ஆடியிருக்கிறார். ஆளுக்கு ஆள் உளறிக்கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். (ஒயின் மட்டும்தானா? மெயின் அயிட்டமும் பரிமாறப்பட்டதா?…)

மத்திய அரசுக்கும் மகிந்தருக்கும் அப்படி என்னதான் ஒரு கொஞ்சல், குலாவல், பிணைப்பு என்று. யாராவது கேட்டால்……. சீனாவின் பக்கம் இலங்கை செல்லாமல் இருப்பதற்காகத்தான் நாங்கள் இப்படி அடிக்கடி பார்ட்டி கொடுக்கவேண்டி இருக்கிறது என்று சிதம்பரங்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

இன்னும் போதையில் இவர்கள் என்ன என்ன பேசினார்கள், எதை எதைப் பற்றி எல்லாம் பேசினார்கள் என்கிற விஷயங்கள் எல்லாம் வெளியே வருகிற போதுதான் தெரியும்……

அவற்றை எல்லாம் மறக்கமுடியுமா? அல்லது மன்னிக்கத்தான் முடியுமா? என்பது!.

செந்தமிழும் செந்தணலும் செங்கொடியும்…. வீடியோ!

”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம்.

அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல.

இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம்.

இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”  —-தமிழ் இன உணர்வின் பெயரால் தன்னையே எரித்துக்கொண்ட செங்கொடி. 

“காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்த தினமலர் (தினமலர் அந்தச் செய்தியை தனது இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டது) போன்றவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ….

 

ஜெயாவுக்குத் தெரியாத….. சட்ட விளக்கம்!

மூன்று பேரின் உயிர்மீட்பு விவகாரத்தில் தனது முடிவுரையை எழுதியதின் மூலம்– தன்மீது போர்த்தப்பட்டிருந்த “ஈழவேஷம்” என்கிற முகமூடியைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்திருக்கிறார் ஜெயலலிதா.

ஒட்டுமொத்தத் தமிழ்நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் கிடக்கிறது…. உங்களிடம் வேண்டுகோள் வைத்துக் கெஞ்சுகிறது…. முழுதாக உங்களால் முடியாதென்றாலும், முடிந்தவரையாவது முயற்சித்திருக்கலாம் அல்லவா?

சட்டம், நியாயம், தர்மம், விதிமீறல் என்றெல்லாம் பேசுகிற நீங்கள்….. பெங்களூர் நீதிமன்றத்தில் யோக்கிய சிகாமணியாகத்தான் நடந்து கொள்கிறீர்களா? சமச்சீர் கல்வி விவகாரத்தில் சட்டத்தை மதித்துத்தான் நடந்து கொண்டீர்களா? உமக்கு என்றால் ஒரு நடைமுறை, ஊரானுக்கு என்றால் ஒரு நடைமுறையா? 

தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என சட்டசபையில் விதி 110ன் கீழ கூறியிருக்கிறார். (அவர் பேசியது உண்மையா இல்லையா என்பது வேறு விஷயம்). இந்த விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால் அது விவாதத்துக்கு வராது. அதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்பதுதான் விதி 110. எதற்காக விவாதிக்க முடியாதபடி விதி 110ஐ பயன்படுத்தி இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும்?

உங்களாலேயே கையாலாகவில்லை என்கிறபோது, வேறு யாரும் அதுபற்றிப் பேசி விடக்கூடாது என்பதும்….. அப்படிப் பேசி அது சட்டசபை நடவடிக்கைகளில் பதிவாகி விடக்கூடாது என்பதும் உங்களது எண்ணம். எவ்வளவு கீழ்த்தரம் இன்னும்கூட உங்களுக்குள் மண்டிக்கிடக்கிறது?

நீங்கள் சொல்லியிருப்பதைப் போல யாரும் உங்களை ரத்து செய்யச் சொல்லவில்லை. தூக்கை நிறுத்துமாறு ஒரு வேண்டுகோள் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்தின் படி பரிந்துரைக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். இதைச் செய்வதால் உனது பதவிக்கு ஒரு இழவும் வந்துவிடப் போவதில்லை. காங்கிரசைத் தவிர…. அவ்வளவு பேரும் தீர்மானத்துக்கு ஆதரவு தரத் தயார். ஆனாலும் நீங்கள் ஏன் இப்படி நடுங்குகிறீர்கள் எனத்தெரியவில்லை.

ஜெயாவின் கூற்று ஒரு பச்சைப் பொய் என்றும், ஒரு மாநில முதல்வர் விதி 161ன் கீழ் தன் அமைச்சரவையில் நிறைவேற்றும் தீர்மானத்தில் தலையிட பிரதமருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கூட உரிமையில்லை என்றும், தன் கையாளாகாத்தனத்தை ஒரு பொய்யால் மறைக்கப் பார்க்கிறார் ஜெ என்றும் பிரபல வழக்குரைஞர் துரைசாமி இன்று பேட்டியளித்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்த விதி எண் 161 என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணமும் உண்டு. கேரளத்தில் தூக்குத்தண்டணைக் கைதியாக இருந்த சி.ஏ.பாலன் என்பவரது கருணை மனுவை, அப்போதைய குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்குப் பிறகுதான்……. அங்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாடுஅவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்றுத் தூக்குத் தண்டனையை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. இது வரலாறு.

கேரள முதல்வருக்கு இருக்கும் அதிகாரம், உனக்கு மட்டும் எபாடித் தாயே இல்லாமல் போனது? கேரளாவும் இந்தியாவிற்குள்தானே இருக்கிறது?

உங்களுடைய கூற்றுப்படியே, ஒருவேளை உண்மையிலேயே முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட…… எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் உட்பட ஒட்டுமொத்தமாக எல்லாத் தலைவர்களுமே தூக்குத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், ஒரு சாதாரணக் குடிமகள் என்கிற இடத்தில் இருந்து கூட எந்த ஒரு கோரிக்கையையும் உங்களால் வைக்க முடியாததின் மர்மம் என்ன? எதிர்த்துக் குரல் கொடுப்பதற்குக் கூட அதிகாரம் வேண்டுமா என்ன?

தான் தீர்மானம் நிறைவேற்றாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பழியைத் தூக்கிக் கருணாநிதி மீது போட்டுத் தப்பிக்க முயற்சிப்பது அதைவிடக் கேவலம். அதாவது, ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேர் பிரச்சினைக்காக, அப்போதைய அரசு அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. (2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி). அதில்– நளினி ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருப்பதால் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், ஏனைய 3 பேருடைய தூக்குத் தண்டனையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவேற்றிக் கடிதம் ஒன்றைக் கவர்னருக்கு அனுப்பியது என்றும் கூறியுள்ளார்.

கருணாநிதியால் ஒரு தீர்மானம் நிறைவேற்றி நளியைக் காப்பாற்ற முடியுமானால்….. உங்களால் தீர்மானம் நிறைவேற்றி ஏன் பேரறிவாளனைக் காப்பாற்ற முடியாது? (தன்னையும் அறியாமல் தன் வாயாலேயே தனக்கு அதிகாரம் உண்டு எனவும், ஆனால் தான் செய்யவில்லை என்பதையும், நளினியைக் காப்பாற்றியது கலைஞருடைய தீர்மானம்தான் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார் ஜெயா)

குப்பையைக் கிளறி விட்டாயல்லவா?…..

அதே 2000ஆண்டில் கலைஞரின் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்திற்கு எதிராக, பக்கம் பக்கமாக நமது எம்.ஜி.ஆரில் நீங்கள் வெளியிட்ட அறிக்கைகளை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். நாடு மறக்குமா? இதோ அதில் ஒரு பகுதி….. படித்துப்பார்.

“ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், இன்னும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியைக் காப்பாற்றியது ஜனநாயகப் படுகொலைக்கு நிகரானது.

மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட ராஜீவின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படிப் போய்ப் பார்க்கலாமா? இது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காகப் போராடுவதுபோலத் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது!

இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்தப் பிரச்சினை அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை அல்ல. இது ஒரு நாட்டுப் பிரச்சனை. ஒரு முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது மட்டும் தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால்…. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன். ஆனால், நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன…….” இவ்வாறு செல்கிறது அறிக்கை.

இப்படிப்பட்ட அரக்ககுணம் கொண்ட உங்களிடமிருந்து எந்த உதவியை எதிபார்க்க முடியும்? தேர்தல் நேரத்தில் நீங்கள் போட்ட ஈழ ஆதரவு வேஷம் எல்லாம்… ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தானா?

சட்டம் தெரியாத கருணாநிதி என்று மூச்சுக்கு மூச்சு முழங்குகிற சட்டம் தெரியாத ஜெயலலிதாவே….. உனக்குள்ள அதிகாரம் என்னவென்று கீழே கொடுத்திருக்கிறோம். உங்களைச்சுற்றி இருக்கும் ‘அவாளிடம்’ காட்டி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

“அரசமைப்புச் சட்ட விதி 161 மற்றும் 72 உட்பிரிவு (3) ஆகியவை குடியரசுத் தலைவர் நிராகரித்த கருணை மனுக்களை மாநில ஆளுநர் ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை தெளிவுபட உறுதி செய்கின்றன. விதி 72 குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் வழங்குகிறது. அதே விதியின் உள் பிரிவு(3) குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும் மாநில ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் தமக்குள்ள அதிகாரப்படி தனித்த முடிவை எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளது”.

இந்த உரிமையை உச்சநீதிமன்றம் தயாசிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கிலும், திரிவேணிசெல் எதிர் குஜராத் மாநில அரசு என்ற வழக்கிலும் உறுதி செய்துள்ளது. இவை குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், குடியுரிமை அமைப்புகளும், சட்ட வல்லுநர்களும், தெளிவாக எடுத்துக் கூறி வந்துள்ளார்கள். பி.யூ.சி.எல். அமைப்பு முதலமைச்சருக்கு தேவையான சட்ட சான்றுகளுடனும், தீர்ப்புகளுடனும் தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் கொடுத்துள்ளது.

மேலே சொல்லப்பட்ட விவரங்கள் குறித்து உரியவாறு மறுப்பு விளக்கம் எதுவுமமே சொல்லாமல் மொட்டையாக, குடியரசுத் தலைவர் நிராகரித்தப்பின், நிராகரித்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லையென்று ஜெயலலிதா கூறியுள்ளார். வடிகட்டிய பொய்யை வாரி இறைத்திருக்கிறார்.

அத்துடன் அரசமைப்புச் சட்ட விதி 257 யும் அதன் உட்பிரிவு (2) யும் காரணம் காட்டி, மத்திய அரசின் முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்று கூறியுள்ளார். விதி 257ம், அதன் உட்பிரிவு(2)ம்– நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை, தொடர்வண்டிப்பாதை, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றில் மட்டும் இந்திய அரசின் அதிகாரம் மாநில அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு மேலே மாநில அரசுக்கென்று உள்ள அதிகாரங்களையோ, மரண தண்டனையை நீக்கி கருணை மனுவை ஏற்கும் ஆளுநரின் அதிகாரத்தையோ, கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசுக்கு விதி 257ம் அதன் உட்பிரிவுகளும் வழங்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் 1981ஆம் ஆண்டு மாரூர்ராம் vs இந்திய அரசு என்ற வழக்கில் கருணை மனுவை ஏற்பதில் ஆளுநரின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அது தனித்து செயல்படக்கூடிய அதிகாரம் என்று கூறியுள்ளார் நீதிபதி வீ.ஆர் கிருஷ்ண அய்யர். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததற்குப் பிறகு தமிழக அரசுக்கு (ஆளுநருக்கு) கருணை மனுவை ஏற்க அதிகாரமில்லை என்று ஜெயா சொல்லியிருப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான வாதம்?.

அது மட்டுமல்ல…கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட நிலையில், புதிய சூழ்நிலை, ஆதாரங்கள் இருப்பின் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு சம்பந்தப்ட்டவர்களோ, வேறு யாரோவதோ குடியரசுத்தலைவரிடம் கோரலாம் என்பதையும் ஜெயா அம்மையார் கூறியிருக்கிறார். அந்த வேறு யாரோவில் ஏன் புரட்சித் தலைவி இல்லை? ஏன் தமிழக அரசு இல்லை?

சரி…. தனக்கு அதிகாரமில்லை என்பதை மட்டும் இப்படி மாய்ந்து மாய்ந்து சொல்லும் ஜெயலலிதா, அப்பாவிகள் மூவரும் தூக்கிலிடப்படுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூட ஏன் சொல்லவில்லை? தனக்கு ரத்து செய்யத்தான் அதிகாரமில்லை என்றாலும், தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று சொல்வதற்குக் கூடவா அதிகாரமில்லை?

காவிரிப் பிரச்சினையில் கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இன்று வரை கர்நாடக அரசு அமல்படுத்த மறுக்கிறது. இதனால் என்ன பெரிய அரசியல் சட்டப்பிரச்சினை கர்நாடகாவுக்கு வந்துவிட்டது?

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே சமச்சீர் கல்வியை ரத்து செய்து, அதற்காகக் கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதாடியதில் இருந்த அந்த ஈடுபாடு கூட, இந்த மூவர் மீதான உயிர் குறித்து ஏன் இல்லை?

தாங்கள் தமிழகத்துக்குத்தான் முதலமைச்சர் என்பதை, தயவுசெய்து இனிமேலாவது நினைவில் கொள்ளுங்கள்.

இனிமேலும் இழத்தல் வேண்டாம் !…

“நிரபராதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம் !”

என்பதற்காகத்தானே சகோதரி இத்தனை போராட்டங்களும்……

உயிரைக் கொடுத்துவிடக் கூடாது என்று போராடிவிட்டு

உயிரைக் கொடுத்துவிட்டாயே……

ஒரு உயிரைக் காக்க இன்னொரு உயிரை விலையாகக் கொடுப்பதை

எந்தவகையில் சகோதரி நியாயமென ஏற்றுக்கொள்ளமுடியும்?

மரணம் மட்டுமே முடிவுகளை மாற்றப் பயன்படும் என்றால்….

எத்தனை உயிர்களை வேண்டுமானாலும்

எடுத்துக்கொள் என்று சொல்லலாம்!

ஆனால், நமக்கு எதிரில் நிற்பதோ…

இரக்கமற்ற, இதயமற்ற, உயிர் அரிப்பெடுத்து அலைகிற

ஜென்மங்கள் என்பதை நீ மறந்துவிட்டாயே.

நீதி வேண்டித் தீக்குளித்து நெருப்பாகிப் போனால் மட்டுமே….

நீதிமன்றம் கண்விழிக்கும் என்று நினைத்தாயோ செங்கொடி நீ?

காஞ்சிபுரத்து வீதிகளில்…..

காலையில் நீ எழுப்பிய கோஷத்தில்…..

என்ன வேகம்? என்ன எழுச்சி?

மாலையில் அத்தனையும் மரணித்துப் போனது ஏன்?

கருகிப் போய்விடக்கூடாது உணர்வுகள் என்பதற்காக….

கருகிப் போய்த்தான் உணர்த்த வேண்டுமா?

அதற்குள் நீ அவசரப் பட்டுவிட்டாயே சகோதரி.

ஒற்றை உயிர் போனதற்காய் ஓராயிரம் உயிர் தொலைத்தோம்…..

போதும்…. போதும்……

இனிமேலும் இழத்தல் வேண்டாம்…

தேவயென்றால்…. எடுத்தலைத் தொடர்வோம்.  

   

                              

     

                                                                      

                    


 

அன்றைக்கே ஒழுங்காக அடித்திருந்தால்….

செப்டம்பர் 9 — வெள்ளிக்கிழமை….

ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுகளுக்கும் கொள்ளி வைப்பதற்காகக் குறிக்கப்பட்டிருக்கிற நாள்.

செப்டம்பர் 9 ம் தேதி சூரியன் உதயமாவதைப் பார்க்க முடியுமா? என்கிற கேள்விக்குறியின் சித்திரவதைகளுக்குள் சிக்கியபடி, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கணத்த இதயத்தோடு…. மூன்று அப்பாவித் தம்பிமார்கள்.

ஒரே ஒரு பெட்டிக்கடை வியாபாரியின் சாட்சியத்தை மட்டும் வைத்துக்கொண்டுத் தூக்குக்கயிற்றை இறுக்குவதன்மூலம்……. இருபத்தியொரு வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதில் குறியாக இருக்கிறது மௌனச்சாமியாரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு.

“நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை,ஒரு நிரபராதி தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது” என்கிற சட்ட தர்மத்தை மீறி…. “தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்” என்கிற சட்ட அடிப்படைக் கோட்பாட்டைத் தாண்டி…. “சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படவேண்டும்” என்கிற சட்ட நிலைப்பாட்டைக் கொன்று…… துளியளவுகூட நியாயம் இல்லாமல் தூக்குக்கயிறு தொங்கவிடப்பட்டிருக்கிறது.

கருணைமனு நிராகரிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு, நகலும் அளிக்கப்பட்ட நாளிலிருந்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 7 வேலைநாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகள், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி ஆகிய விடுமுறை நாட்களைக் கழித்தால் 8ம் தேதி வரை 7 அரசு வேலைநாட்கள் வருகிறது.. அந்த அவகாசம் முடிந்த பிறகு (எந்த முயற்சிகளும் பயனளிக்காத நிலையில்) 9 ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு…. இந்தியாவின் மனிதாபிமானத்தை, நாகரிகத்தை, இறையாண்மையை, இனமான உணர்வைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்.

“கடைசி ஆசை என்ன?’ என்று தெரிவிக்கும்படி எழுத்து மூலமாக மூன்றுபேரிடமும் கேட்கப்பட்டுவிட்ட கடைசிக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்போதைக்கு நாம் தைரியம் கொள்ள இரண்டு விஷயங்கள் மட்டுமே கைவசம் உள்ளன.

ஒன்று– மாண்புமிகு. முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால்….. கயிறு அறுந்துவிழ வாய்ப்பு இருக்கிறது. (ஆனால், அதற்கான வாய்ப்புகள் அம்மையாரால் அடைக்கப்பட்டு விட்டதாகவே நான் கருதுகிறேன்).

இரண்டு– கருணை மனுச்செய்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நிராகரித்தது— செல்லும் தன்மையற்றது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். இக்கருணைமனு 11 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த காலத்தில் நான்கு ஜனாதிபதிகள் பதிவியில் இருந்திருக்கிறார்கள். எதற்காக இவ்வளவு காலம் இந்த மனுவிற்குத் தேவைப்பட்டது என்பது ஒரு நியாயமான விவாதப் பொருளாகக் காட்டப்படும் பட்சத்தில், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முன்வரலாம். (இதற்கு உறுதியாக வாய்ப்பிருக்கிறது… சட்டம் இன்னும் சாகாமலிருந்தால்).

ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்க எந்தச் சட்டத்தில் இடமிருக்கிறது? .ஏற்கனவே .20 வருடகால சிறைவாசம். (ஆயுள் தண்டனை என்கிற கால அளவையும் தாண்டி). இப்போது தூக்கு….. ஊழலில் திளைத்துப்போன நீதித்துறையும், ஒன்றுக்குமே உதவாத அரசு நிர்வாகமும் குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டு எழுந்துவருவதற்கு 20 வருடங்களானால் அதற்கு யார் பொறுப்பு?

மிகவும் காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும், நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரிட்டனின் பிரிவி கௌன்ஸில் 1993-இல் தீர்ப்பளித்திருப்பது….. நமது மாட்சிமை பொருந்திய நீதியரசர்களுக்குத் தெரியாமல் இருக்காது என்று நாம் நம்புவோமாக. (அந்தப் பிரிட்டானியச் சட்டத்தின் நகலைத்தான் நாம் இன்னும் பயன்படுத்தி வருகிறோம்).

இந்த வழக்குத் தொடர்பான சில கேள்விகளுக்கு இன்னும்கூட விடை கிடைக்கவில்லை…. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவரது கையிலிருந்த பெரிய சூட்கேஸ் எங்கே என்கின்ற சோனியா காந்தியின் வினாவிற்கே இதுவரை முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. குற்றம் சுமத்தப்பட்டுத் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளோர் கேட்கும் வினாக்களுக்கோ, அல்லது அவர்கள் மீதான குற்றங்களுக்கோ ஆதாரமெதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவைகளையெல்லாம் கண்டுபிடிக்காமல் இது என்ன அநியாயம்?

முழுமையான விசாரணைகூட இன்னும் முடியவில்லை என்கிற நிலைதான் நீடிக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் இவர்களுக்குத் தூக்குத்தண்டனையை நிறைவு செய்வது சட்டப்படி எப்படி சரியானதாகும்? யாரைத் திருப்திப்படுத்த வேண்டி இந்த அவசரம்?

இவர்கள் யாருமே இந்த வழக்கிற்கு நேரடித் தொடர்புடையவர்கள் என்று நிரூபிக்கப்படாதவர்கள். எதற்காக உதவி செய்தோம் என்றே அறியாதர்வர்கள்…..  18 வது குற்றவாளிகளாகப் பட்டியலிடப்பட்டவர்கள். இதுவரை 78 தூக்குத் தண்டனைகள் ரத்து செய்யபட்டிருக்கிறதே…. .இதை ஏன் செய்யக்கூடாது என்பதுதான் கேள்வி.

ராஜீவ்காந்தி கொலையில் காட்டுகிற அக்கறையை…. அப்பாவி மக்களை, பாதுகாப்புப்படை வீரர்களைக் கொன்று குவித்த கசாப், அப்சல் குரு போன்ற கொடியவர்களின் தூக்குதண்டனையில் காட்டத் தயங்குவது ஏன்? சண்டையில் உயிர்நீத்த மக்களின் உயிரை விட ராஜீவின் உயிர் எந்த வகையில் உயர்ந்தது? இவர் ஒருவரின் உயிருக்காக எத்தனை உயிர் பலியானது? அது போதாது என்று இன்னும் வேண்டுமா உங்களுக்கு?

தனிப்பட்ட பகையின் பொருட்டு ராஜீவ்காந்தி கொல்லப்படவில்லை. தனது அதிகாரத் திமிரை வைத்து ஒரு இனத்தையே அழிக்க முற்பட்ட பாவத்திற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் அது. அதுகூட ஒருவகையில் போர்முறைக்கு உட்பட்ட நடவடிக்கைதான். கொல்லப்பட வேண்டியதுதான் சாகடிக்கப்பட்டது….. கொன்றவர்களும் சாவெய்தி விட்டார்கள். மீண்டும் அதையே தூண்டும் வகையில் எதுவும் ஆகிவிடக்கூடாதே என்பதுதான் எங்களது கவலையெல்லாம்…

ராஜீவ் மட்டுமல்ல…. சர்வாதிகாரிகள் அனைவருமே சாகடிக்கப் பட்டதாகத்தான் வரலாறு சொல்கிறது.

+++++++++++##############++++++++++++++

அட சிங்களப் பேய்களா….

அடிக்கும்போது அன்றைக்கே நீங்கள் ஒழுங்காக அடித்திருந்தால்….

இன்றைக்கு ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

செய்வது எதையுமே ஒழுங்காகச் செய்கிற பழக்கம்

என்றைக்குத்தான் உங்களிடம் இருந்திருக்கிறது?