நமது அண்டை நாடான சீனாவில், மரண தண்டனைகளுக்குப் பஞ்சம் இல்லை.
மரண தண்டனை என்றால், இங்கிருப்பது போல் தூக்கிலிடும் வழக்கம் எல்லாம் அங்கு இல்லை.
விஷ ஊசி போடுவது அல்லது தலையின் பின் பக்கத்தில் துப்பாக்கியால் சுடுவது ஆகிய இரண்டு முறைகளில்தான் மரண தண்டனை அங்கு நிறைவேற்றப் படுகிறது.
மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச நாடுகளும், காட்டுக் கத்தலாக கத்தியும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், மரண தண்டனையைச் சர்வ சாதாரணமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது சீனா.
கடந்த 2005-ல் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
.
சீனாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை குறித்தான நடவடிக்கைகள், வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாமல் ரகசியமாகத்தான் நடக்கும். இதையும் மீறி, ஒரு சில தண்டனைகள் பற்றிய விஷயங்கள், வெளி உலகத்துக்குக் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன
அப்படி வெளியில் வந்த ஒரு விஷயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம்…….
.
போதை மருந்துக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு, 2003ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது, அந்த நான்கு பெண்களின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.
அந்தப் புகைப்படங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு டி.வி சேனலில் வெளியாகி, சர்வதேச அளவில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மா ஷிங்குய், லி ஜூகுவா, டாய் டொங்குய், ஹி ஜியுலிங் என்ற நான்கு பெண்களுக்கும், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நான்குபேரும் வுகான் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் இரவே, இவர்களின் கடைசி நிமிடங்களைப் பதிவு செய்வதற்காகக் கேமராமேன்கள் வந்துவிட்டனர்.
முதல் நாள் இரவு 9:00 மணிக்குத் துவங்கி, தண்டனை நிறைவேற்றப்படும் அடுத்த நாள் காலை 7:21 மணி வரை, அவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு நிகழ்விலுமே, அந்த நான்கு பெண்களும் சாவைக் கண்டும் சற்றும் கலங்காமல் புன்னகையுடனேயே காணப்பட்டனர்.
முதல் நாள் இரவில், நான்கு பேருமே தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டிருந்தது.
அந்த இரவுப் பொழுதில், தண்டனை நிறைவேற்றப்படும் போது அணிய வேண்டிய உடையைத் தானே தேர்வு செய்து அணிந்து கொண்டார் டொங்குய். இதன்பின் இரவு உணவு சாப்பிட்டார். இது, அவரின் கடைசி உணவு என்பதால், அங்கு இருந்த பெண் அதிகாரியே அவருக்கு உணவை ஊட்டி விட்டார். சிரித்த முகத்துடன் அதை மகிழ்ச்சியாக சாப்பிட்டார் டொங்குய்.
இரவு 10:15 மணிக்கு மற்றொரு அறையில், லி ஜூகுவாவின் கடைசி ஆசை எழுத்துக்களாகப் பதிவு செய்யப்பட்டன. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் புன்னகையுடன் அமர்ந்தபடி, தன் கடைசி ஆசைகளை அவர் கூற, அங்கிருந்த சிறை அதிகாரி அதைக் கனத்த இதயத்துடன் பதிவுசெய்து கொண்டார்.
தண்டனை பெற்றவர்களில் மிக இளையவரான, 25 வயது ஜியுலிங்கின் அறையிலும் இதே காட்சி காணப்பட்டது. சிறிய ஸ்டூலில் சிரித்தபடி அமர்ந்திருந்த ஜியுலிங்கிற்கு, பெண் அதிகாரி கடைசி உணவை ஊட்டி விட்டார்.
அதிகாலை 4:00 மணிக்கு, நான்கு பேரும் ஒரே அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் காவல் அதிகாரிகளும், சக கைதிகளும் அமர்ந்திருக்க…..
தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்குச் செல்வதற்கான ஷூவை, அந்த நால்வருக்கும் அதிகாரிகள் வழங்கினர். அப்போதும் கூட மிகவும் கலகலப்பாகக் காணப்பட்ட ஜியுலிங், காவல் அதிகாரிகளுடனும், சக கைதிகளுடன், ஜோக் அடித்தபடி இருந்தார்.
பொழுது புலர்ந்தது. அந்த நான்கு பெண்களுக்கு மட்டும், “அடுத்த நாள் பொழுது புலர்வதைக் காண்பதற்கு நாம் உயிருடன் இருக்கப் போவது இல்லை’ என்ற உண்மை உள்ளுக்குள் உறைத்திருக்கும்.
ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், சுறுசுறுப்பாகக் குளித்து முடித்து, புன்னகையை உதட்டில் தவழவிட்ட படியே, தங்களது கடைசிப் பயணத்துக்குத் தயாராயினர் அந்த நான்கு பெண்களும்.
காலை 7:00 மணிக்கு நான்கு பேரும் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன், அன்று தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மேலும், 20 கைதிகள் காத்திருந்தனர். அனைவரும் வரிசையாக நடத்தி அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற மூன்று பேரும் சிரித்த முகத்துடன் அமைதியாகச் சென்று கொண்டிருக்க, வயதில் இளையவரான ஜியுலிங் முகத்தில் மட்டும் புன்னகை மறைந்து, கலவர ரேகைகள் படரத் தொடங்கின. நடந்து செல்லும் போதே அவரது மனதில் மரண பீதி ஏற்பட்டது.
வயிற்றுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட, கண்களை முட்டிக் கொண்டுக் கண்ணீர் எட்டிப் பார்க்க, அழுகையை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும், வாய் வழியாகவும், கண்கள் வழியாகவும், அழுகையாகவும், கண்ணீராகவும் வெடித்துச் சிதறின.
மரணத்தைத் தழுவக்கூடிய மனதைரியத்தை இழந்தவராக, அவர் வாய்விட்டுக் கதறி அழுத காட்சி கொடூரமானது.
குற்றவாளிகள் அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குப் பின்பக்கமாகத் தண்டனையை நிறைவேற்றுவதற்காகத் துப்பாக்கிகளுடன் போலீசார் தயாராக இருந்தனர்.
காலை 7:21 மணிக்குத் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் வரிசையாக வெடிக்கத் துவங்கின…..
துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு சப்தத்தின் முடிவிலும், ஒரு குற்றவாளி அலறித் துடித்தபடி மண்ணில் சாய்ந்தார்…..
இப்போது ஜியுலிங்கின் முறை வந்தது. கண்களை இறுக மூடிக் கடைசி நொடிக்காகக் காத்திருந்தார். அவரது முகத்தில் அப்போது ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
சீனப் போலீசாரின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட புல்லட் எனும் உலோகப் பிசாசு….. ஜியுலிங்கின் தலையின் பின்புறத்தில் பாய்ந்து, முன்புறம் வழியாக வெளியில் வந்து விழுந்தது. சில நொடிகளுக்கு முன்பு உயிருடன் இருந்த ஜியுலிங்கின் உடல், உயிரற்ற உடலாக மண்ணில் சாய்ந்து மரித்துப்போனது.
மனித நேயத்தையும், மனித உரிமை ஆர்வலர்களின் கூக்குரலையும் மவுனமாக்கிவிட்டு……. அந்த இடமே மயான அமைதியில் மூழ்கிப் போனது.
நன்றி:- சி. சண்முகநாதன்.