“பல்லாவரத்தில் இளம்பெண் நிர்வாணம்”– நேற்றைய பத்திரிகைகள் அனைத்திலும் இதுதான் பரபரப்பான செய்தி.
“ஒருவேளை பைத்தியமாக இருக்குமோ?’ என்கிற பரிதாபத்தோடு செய்தியைப் படிக்க ஆரம்பித்தால்…… எத்தனை பெரியார்கள் வந்தாலும் இப்படிப்பட்ட ஜென்மங்களைத் திருத்தவே முடியாதோ? என்கிற கோபம் மட்டுமே மிஞ்சி நின்றது.
நீங்களும் அந்தக் கதையைப் படியுங்கள்…..
நேற்று முன்தினம் நிறைந்த அமாவாசை. இரவு 1 மணிக்கு, சென்னை பல்லாவரம் பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ரோந்துப்பணியில் இருந்திருக்கிறார். பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அங்கிருந்து மிகுந்த பதட்டத்துடன் நால்வர் ஓடிவந்தனர். ஜீப்பைப் பார்த்ததும் நின்ற அவர்கள் இன்ஸ்பெக்டரிடம்,”” சார் மார்க்கெட்டில் தலைவிரி கோலத்துடன் பேய் உலா வருகிறது,” என்று கூறினர். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேய் உலவுவதாகக் கூறிய மார்க்கெட் பகுதிக்குள் தன் ஜீப்பைச் செலுத்தினார்.
அப்போது அங்கே தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்தபடி முழு நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச் லைட்டை எடுத்து, அந்த உருவத்துக்குக் கால் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்திருக்கிறார். (கால்கள் இல்லாவிட்டால் பேய், இருந்தால் பெண் என்பது அவருடைய கணிப்பு. சபாஷ்!).. அப்போது தான், அது பேயல்ல… இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து வருகிறார் என்பது புரிந்திருக்கிறது.
உடனடியாக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அங்கிருந்த பெண் போலீசாரிடம், அவர்களது மாற்று உடையை எடுத்து வருமாறு கூறினார். அவர்களும் உடனே, உடையுடன் ஜீப்பில் வந்திறங்கினர். போலீசைப் பார்த்ததும் அந்த நிர்வாணப் பெண் அங்கிருந்து ஓட ஆரம்பித்துவிட்டார்.. அரை கிலோமீட்டர் தூரம் விரட்டி மடக்கிப் பிடித்து, அந்தப் பெண்ணுக்கு உடைகளை மாட்டிப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், அந்த பெண் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியில் உள்ள ஒருவரை அவ்ர் காதலித்துள்ளார் என்பதும், நன்றாகப் பேசிக் கொண்டிருந்த காதலன், திடீரெனக் கம்பி நீட்டிவிட்டான் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
அவனை மறக்கமுடியாத நிலையில், அங்குள்ள குறிசொல்லும் சாமியார் ஒருவரை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர், “நிறைந்த அமாவாசை இரவில், குளித்துவிட்டு, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈர உடம்புடன் ஊரைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும்’ என்று கூறியுள்ளார்.
(சாமியார் நிறைய செக்ஸ் படம் பார்ப்பவர் போலிருக்கிறது. ஈரம் சொட்டச் சொட்ட நிர்வாணமாக நடந்தால்தான் கடவுள் அருள் கிடைக்குமோ?. நல்லவேளை, தன்னுடன் ஒரு இரவு தங்கினால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லாமல் விட்டாரே…. அதுவரை உத்தமம்!).
இதை நம்பிய அந்தப் பெண், திருவண்ணாமலையிலேயே அப்படி செய்தால், ஊரில் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று கருதி, பம்மலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கியவுடன், 11 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, ஈர உடையுடன் பொழிச்சலூர் – பம்மல் சாலையில் நடந்து வரும்போதே, உடைகளை ஒவ்வொன்றாகக் களைந்துள்ளார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நிர்வாணமாகவே பல்லாவரம் வரை நடந்து வந்ததாகத் தெரியவந்தது.
இது போன்று ஊர்வலமாகப் போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசித் தன்னை எப்படியும் சேர்த்து வைத்துவிடுவார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். (அப்படின்னா, சாமியார் சொன்னது உடான்ஸ்தான் என்பது அந்தப் பெண்ணுக்கும் தெரிந்து விட்டதோ?).
இதையடுத்து, போலீசார் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிக்குத் தகவல் அளித்தனர். அவர்கள், இப்பெண்ணை ஏற்க மறுத்ததால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். (உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் ஊர்வலம் போகிற அளவுக்குத் துணிந்துவிட்ட இப்படிப்பட்ட பெண்னை பெற்றோரும் சகோதரியுமே ஏற்க மறுக்கிறபோது, காதலன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வானாம்?).
காவல்துறை செய்ய வேண்டிய முதல் வேலை– இந்தப் பெண்ணை நிர்வாணமாக ஓடச்சொல்லி ஐடியா கொடுத்த, அந்தச் சாமியாரைப் பிடித்து வந்து அப்படி ஓடவிட வேண்டும். இல்லாவிட்டால்…. இன்னும் எத்தனை பெண்களை இப்படி அவர் ஓடவிடுவாரோ தெரியவில்லை.
அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அடித்த கமெண்ட்தான்…. என்னுடைய கமெண்டும்.
“நல்லவேளை, பேய் என்று நினைத்து அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியதால் பரவாயில்லை…… ஒருவேளை பெண்ணென்று தெரிந்திருந்தால்?…. நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கும்!’
யார் செய்த புண்ணியமோ, பஞ்சர் ஆகாமல் தப்பித்தது— சட்டம் ஒழுங்கு!