“கரண்டே இல்லாத ஊருக்கு எதுக்குடா லைட்டு?”
மின்சாரத்தில் நாம் எந்த அளவுக்கு ஏழையாக இருக்கிறோம் என்கிற அவலம்….. இபோதுதான் நமக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் எண்ணைத் திரி விளக்கிலும், ஏரியாவுக்கு ஒன்றாக எரிகிற தெருவிளக்கிலும்தான் படித்தோமாக்கும் என்று…..
பெரிசுகள் எல்லாம் பெருமையுடன் சொன்னபோது, நமக்கு அது நக்கலாகவும் கிண்டலாகவும்தான் தெரிந்தது.
ஆனால், அம்மாவின் புண்ணியத்தில் இப்போதுதான் அதன் அருமையை அனுபவபூர்வமாக உணரமுடிகிறது.
விலைவாசி, வீட்டு வாடகை, எரிபொருள் விலையேற்றம், வாகன நெரிசல், சுற்றுச்சூழல் சீர்கேடு என….. நாள்தோறும் எல்லாவ்ற்றிலுமே நாம் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் கூட–
மின்சாரமில்லாத வாழ்க்கை என்பதுதான் நம்மை மீளாத்துயரில் சிக்கித் திணறவைத்திருக்கிறது.
சென்னைப் புறநகரில் ஆரம்பித்து குமரி முனை வரை, ஊருக்கு ஊர்…. தெருவுக்குத் தெரு….. வீட்டுக்கு வீடு…… இந்த சோகக் குரல் கேட்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ நாம் மின்சாரத்துக்கு அடிமை ஆகிவிட்டோம். அதிகாலையில் வெந்நீர் போடுவதில் ஆரம்பித்து, இரவில் கொசுவிரட்டி வரை எல்லாமே மின்சாரமயம்.
ஒருநாள் முழுக்கக் கரண்ட் ஸ்டிரைக் செய்தால், நமது இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துத்தான் போகும்.
கை விசிறி, சிம்னி விளக்கு….. எனப் பரணில் தூக்கிப் போட்டவற்றை எல்லாம், மீண்டும் தூசி தட்டிக் கீழே இறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஒட்டடை பிடித்துப் போயிருந்த அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கின்றன.
வெங்காயம், தக்காளி போலத்தான் மின்சாரமும்….. தேவைக்கேற்றவாறு உற்பத்தி இல்லாததால்தான் இவ்வளவு சிக்கல்களும்.
இலவசம் என்கிற பெயரால் இறைக்கப்படுகிற தேவையற்ற பகிர்மானமும் இன்னொரு காரணம்.
நல்லவேளையாக, அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுப் பயம் இருப்பது, ஒருவகையில் நமக்குச் சாதகமாக இருக்கிறது.
இல்லாவிட்டால், “இவ்வளவுதான் மின்சாரம் ஸ்டாக் இருக்கிறது. விலை ஏற்றுவதைத் தவிர வழியில்லை. தேவைப்பட்டவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வேண்டாதவர்கள் விட்டுவிடுங்கள்” என்று தடாலடியாகக் கூட அறிவிக்கக்கூடும்.
பிறகென்ன? லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களின் வீடுகளில் மட்டும் விளக்குகள் எரியும். நம்மைப் போன்றவர்களின் வீட்டில் வயிறு மட்டும்தான் எரியும்.
இப்போதும்கூட கிராமப்புறங்களில் என்ன பேசுகிறார்கள் தெரியுமா?
பொறந்தா…. ஒண்ணு போயஸ் கார்டன் ஏரியாவில பொறந்திருக்கனும், அல்லது கோபாலபுரத்திலேயாவது இருந்திருக்கனும். அங்க மட்டும்தான் எப்போதுமே கரண்டு இருக்குதாமே……
இருக்கிற காசையெல்லாம் இலவசம் என்கிற பெயரால் நாசம் செய்துவிட்டு…. இரண்டு பேருமே நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மின்வெட்டே இல்லாத நிலைக்கு மாநிலத்தை மீட்டெடுப்பது எப்படி என்கிற சூட்சமத்தை, குஜராத் சென்றாவது கற்றுக்கொண்டு வாருங்கள் என்று சொன்னால்….
கண்கெட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம் எதற்கு என்று, அதற்கும் கையை விரித்து விட்டார்கள்.
முதலில்- அமைச்சர் பெருமக்களின் அறைகளில் இருக்கிற ஏ.சி. வசதிகளை அகற்றுங்கள். அவர்கள் என்ன வெள்ளைக்காரன் வீட்டுப் பிள்ளைகளா? ஏ.சி.இல்லாமல் இருக்கமாட்டார்களா?
அடுத்ததாக- பொதுமக்களுக்கு அமல்படுத்துகிற மின்வெட்டைப் போலவே போயஸ் கார்டனுக்கும் செயல்படுத்துங்கள்.
அரசு அலுவலகங்கள் அனைத்திலுமே, ஏ.சி.யைப் பிடுங்குங்கள். கஷ்டத்தில் எல்லோருமே பங்கு கொள்வோம்.
மீண்டும்………
எங்களுக்குச் சொன்ன அதே எண்ணைத் திரி விளக்குக் கதைகளை…. எதிவரும் காலத்தில், எமது பேரன் பேத்திகளுக்குச் சொல்லத் தயாராவோம்!
அடுத்த தேர்தல் அறிக்கையில்……
வீட்டுக்கொரு அரிக்கேன் விளக்கு இலவசம் என்று அறிவித்துவிடுங்கள்……
அதற்குத்தான் டிமாண்ட் அதிகமாக இருக்கும்!
அதுக்குத் தேவையான மண்ணெண்ணைக்கு எங்கு போறது? என்றெல்லாம் கேள்வி கேட்காமல்…..
கீழே உள்ள படத்தில் இருக்கிறமாதிரி, பொறுப்பாப் போயி வரிசையில உக்காந்துக்கனும். புரியுதா?
சரி….
கரண்டும் இல்லை…. மண்ணெண்ணையும் கிடைக்கலைன்னா…….
அதுக்கும் ஒரு ஈஸியான வழி இருக்குதுல்ல………
கீழே உள்ள விளம்பரத்தைப் பாருங்க……..
இன்னும் என்ன யோசனை?…….
குடும்பத்தோட பொட்டியக் கட்டிக்கிட்டுக் கிளம்புங்க!







100% correct frnd..