காதல் என்பதற்கு என்னதான் உண்மையான அர்த்தம்?
உயிர் வாழக் காதலா? உயிர் வீழக் காதலா?
ஒன்றாகச் சேர முடியவில்லை என்கிற நிலை வந்தால்…..
ஒன்று- சாகிறார்கள். அல்லது சாகடிக்கிறார்கள்.
காதலைத்தான் சாவதற்கும் காரணமாகச் சொல்லுகிறார்கள்.
காதல் எது? ஒருதலைக் காதல் எது? உடல் கவர்ச்சி எது? என வித்தியாசம் காண முடியாத கோளாறு…..
இதனால்தான், பெரும்பாலான காதல்கள் அசம்பாவிதத்திலேயே முடிகின்றன.
காதலர்களில் பெரும்பாலானோர், கல்யாணம் வரை செல்வதை விடவும்…..
கழிவறைக்கும், கர்ப்பத்தைக் கலைப்பதற்குமே அதிகமாகச் செல்கிறார்கள்.
காயிதே மில்லத் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி சங்கீதாவுக்கும், பிரியாணிக் கடையில் மாஸ்டராக இருக்கும் மணிக்கும் காதல்.
இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக- சங்கீதா, மணியிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
வழக்கம் போலவே சங்கீதா வீட்டிற்குத் திரும்பும்போது, மது போதையில் நின்றிருந்த மணி, சங்கீதாவை வழிமறித்துப் பேச முயற்சித்திருக்கிறார்.
ஆனால் சங்கீதா பேசாமல் போகவே, ஆத்திரத்தில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சங்கீதாவைக் குத்திக் கொலை செய்து விட்டு மணி தப்பியோடி விட்டார்.
தலைமறைவான மணியைப் போலீசார் கைது செய்து விசாரித்தபோது……
“சங்கீதாவைப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்ததாகவும், காதலர் தினத்திற்குக் கொடுப்பதற்காகச் சங்கீதாவிற்குப் பரிசுப் பொருட்கள் வாங்கி வைத்திருந்ததாகவும், ஆனால், அவர் பேசாமல் போனதால் கொடுக்க முடியாமல் போய்விட்டதாகவும், தான் பத்தாம் வகுப்பு வரையில் படித்துள்ள நிலையில், அவர் பட்டப்படிப்புப் படிப்பதால், படிப்பைக் காட்டி தன்னைப் பிரிந்து விடுவாரோ என்ற ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும்” கூறியுள்ளான்.
“பள்ளியில் படித்தபோது நன்கு பழகியவள், கல்லூரியில் சேர்ந்தபிறகு தவிர்க்க ஆரம்பித்தது எனக்குப் பிடிக்கவில்லை. காதலர் தினத்தன்று பேச முயன்றும் முடியவில்லை. எனவேதான், கடைசியாக ஒருமுறை கேட்டுவிடுவது, காதலிக்கச் சம்மதிக்காவிட்டால் தீர்த்துக் கட்டிவிடுவது என்ற முடிவுடன்தான் கத்தியுடன் போனேன். மறந்துவிடு என்று அவள் சொன்னதால் குத்திக் கொன்றேன்” என்றும் விளக்கம் அளித்திருக்கிறான்.
காதல் என்கிற வார்த்தை களங்கப்படுவதே…… இப்படிப்பட்ட காதலர்களால்தான்.
எனக்கில்லாத நிலையில் என்னாலேயே நீ கொல்லப்படுவாய் என்பதும் கூட….. காதலின் ஒரு பகுதியா?


